சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.93 திருநறையூர்ச் சித்தீச்சரம்
பண் - குறிஞ்சி
நீரும் மலரும் நிலவுஞ் சடைமேல்
ஊரும் அரவம் உடையான் இடமாம்
வாரும் அருவி மணிபொன் கொழித்துச்
சேரும் நரையூர்ச் சித்தீச் சரமே.
1
அளைப்பை அரவேர் இடையாள் அஞ்சத்
துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம்
வளைக்கை மடவார் மடுவிற் றடநீர்த்
திளைக்கும் நரையூர்ச் சித்தீச் சரமே.
2
இகழுந் தகையோர் எயில்மூன் றெரித்த
பகழி யொடுவில் லுடையான் பதிதான்
முகிழ்மென் முலையார் முகமே கமலந்
திகழும் நரையூர்ச் சித்தீச் சரமே.
3
மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால்
இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம்
நறக்கொள் கமலம் நனிபள் ளியெழத்
திறக்கும் நரையூர்ச் சித்தீச் சரமே.
4
முழுநீ றணிமே னியன்மொய் குழலார்
எழுநீர் மைகொள்வான் அமரும் இடமாம்
கழுநீர் கமழக் கயல்சேல் உகளுஞ்
செழுநீர் நரையூர்ச் சித்தீச் சரமே.
5
ஊனா ருடைவெண் டலையுண் பலிகொண்
டானார் அடலே றமர்வான் இடமாம்
வானார் மதியம் பதிவண் பொழில்வாய்த்
தேனார் நரையூர்ச் சித்தீச் சரமே.
6
காரூர் கடலில் விடமுண் டருள்செய்
நீரூர் சடையன் நிலவும் இடமாம்
வாரூர் முலையார் மருவும் மறுகில்
தேரூர் நரையூர்ச் சித்தீச் சரமே.
7
கரியின் உரியுங் கலைமான் மறியும்
எரியும் மழுவும் உடையான் இடமாம்
புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள்
தெரியும் நரையூர்ச் சித்தீச் சரமே.
8
பேணா முனிவன் பெருவேள் வியெலாம்
மாணா மைசெய்தான் மருவும் இடமாம்
பாணார் குழலும் முழவும் விழவிற்
சேணார் நரையூர்ச் சித்தீச் சரமே.
9
குறியில் வழுவாக் கொடுங்கூற் றுதைத்த
எறியும் மழுவாட் படையான் இடமாம்
நெறியில் வழுவா நியமத் தவர்கள்
செறியும் நரையூர்ச் சித்தீச் சரமே.
10
போரார் புரமெய் புனிதன் அமருஞ்
சீரார் நரையூர்ச் சித்தீச் சரத்தை
ஆரூ ரன்சொல் லிவைவல் லவர்கள்
ஏரார் இமையோர் உலகெய் துவரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com