சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் |
ஏழாம் திருமுறை |
7.93 திருநறையூர்ச் சித்தீச்சரம் பண் - குறிஞ்சி |
நீரும் மலரும் நிலவுஞ் சடைமேல்
ஊரும் அரவம் உடையான் இடமாம்
வாரும் அருவி மணிபொன் கொழித்துச்
சேரும் நரையூர்ச் சித்தீச் சரமே.
|
1 |
அளைப்பை அரவேர் இடையாள் அஞ்சத்
துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம்
வளைக்கை மடவார் மடுவிற் றடநீர்த்
திளைக்கும் நரையூர்ச் சித்தீச் சரமே.
|
2 |
இகழுந் தகையோர் எயில்மூன் றெரித்த
பகழி யொடுவில் லுடையான் பதிதான்
முகிழ்மென் முலையார் முகமே கமலந்
திகழும் நரையூர்ச் சித்தீச் சரமே.
|
3 |
மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால்
இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம்
நறக்கொள் கமலம் நனிபள் ளியெழத்
திறக்கும் நரையூர்ச் சித்தீச் சரமே.
|
4 |
முழுநீ றணிமே னியன்மொய் குழலார்
எழுநீர் மைகொள்வான் அமரும் இடமாம்
கழுநீர் கமழக் கயல்சேல் உகளுஞ்
செழுநீர் நரையூர்ச் சித்தீச் சரமே.
|
5 |
ஊனா ருடைவெண் டலையுண் பலிகொண்
டானார் அடலே றமர்வான் இடமாம்
வானார் மதியம் பதிவண் பொழில்வாய்த்
தேனார் நரையூர்ச் சித்தீச் சரமே.
|
6 |
காரூர் கடலில் விடமுண் டருள்செய்
நீரூர் சடையன் நிலவும் இடமாம்
வாரூர் முலையார் மருவும் மறுகில்
தேரூர் நரையூர்ச் சித்தீச் சரமே.
|
7 |
கரியின் உரியுங் கலைமான் மறியும்
எரியும் மழுவும் உடையான் இடமாம்
புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள்
தெரியும் நரையூர்ச் சித்தீச் சரமே.
|
8 |
பேணா முனிவன் பெருவேள் வியெலாம்
மாணா மைசெய்தான் மருவும் இடமாம்
பாணார் குழலும் முழவும் விழவிற்
சேணார் நரையூர்ச் சித்தீச் சரமே.
|
9 |
குறியில் வழுவாக் கொடுங்கூற் றுதைத்த
எறியும் மழுவாட் படையான் இடமாம்
நெறியில் வழுவா நியமத் தவர்கள்
செறியும் நரையூர்ச் சித்தீச் சரமே.
|
10 |
போரார் புரமெய் புனிதன் அமருஞ்
சீரார் நரையூர்ச் சித்தீச் சரத்தை
ஆரூ ரன்சொல் லிவைவல் லவர்கள்
ஏரார் இமையோர் உலகெய் துவரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |